ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்’! யாழில் கதறும் தாய், பிள்ளைகள்

“ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில், சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்வைக் கண்டித்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில் OMP வழங்க முன்வரும் இழப்பீடு தங்களுக்கு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களையும் ஏற்கப் போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

 

இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

போராட்டக்களத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் சற்று பதற்ற நிலையும் ஏற்பட்டது.

 

இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

More News