அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஈரான் மீதான கடல்சார் முற்றுகை இன்று மதியம் 14:00 GMT (இலங்கை நேரப்படி இரவு 7:30 மணி) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அந்தவகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படையின் நகர்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கப்பல் ஈரானியக் கடற்கரையிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு, போர் தொடங்கிய காலத்திலிருந்து வளைகுடா பகுதிக்கு மிக நெருக்கமாக இக்கப்பல் அவதானிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
மேலும், அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு அருகாமையில் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லக்கூடிய இரண்டு அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு போர்க்கப்பல்களும் (Guided-missile destroyers) தென்பட்டுள்ளன.
இராணுவ நகர்வுகள்
இவை ஆபிரகாம் லிங்கன் கப்பல் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், அவற்றின் பெயர்களை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வலுவான இராணுவ நகர்வுகள், அமெரிக்கா தனது முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தயாராகி வருவதையே உறுதிப்படுத்துவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.







