இடமாற்ற சபையின் ஊடாக வருடாந்த இடமாற்றங்களை பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள் உரிய முறையில் தமது பாடசாலைகளை பொறுப்பெடுக்க அனுமதிக்காவிட்டால் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை முடக்கி போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண ஆசிரியர்களை மோத விடும் வடமாக ஆளுநரின் அரசியல் விளையாட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சேவையின் தேவை கருதி என்ற பெயரில் அரசியல் நீதியாக ஆசிரிய இடமற்றாற்றங்களை மேற்கொண்ட வட மாகாண கல்வி உயர் அதிகாரிகளுக்கும் வடமாகாண ஆளுநருக்கு சிறந்த பதிலாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்காலிக இடைநிறுத்த உத்தரவு அமைந்துள்ளது.
சேவையின் தேவை கருதிய இடமாற்றம் இடம்பெற்றால் மட்டுமே வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் தெரிவித்த கருத்து ஆசிரியர்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்தாகும்.
வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றத்தில் வருகை தர உள்ள நிலையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் சுமார் 193 பேர் உள்ளடக்கப்பட்டனர்.
உண்மையில் நேர்மையான ஆளுநர் என்றால் பிரச்சினையான 193 பேருக்கு பதிலாக அதே அளவு தொகையை நிறுத்தி வைத்துக்கொண்டு ஏனையவர்களை விடுவித்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அரசியல் அடிமைத்தனமும் ஆளுமையற்ற செயற்பாடு காரணமாக வடக்கு கல்வியை ஆளுநரும் அதிகாரிகளும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த இடமாற்றம் தவறு அதை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்தார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும் ஆளுநர் மேற்கொண்டது தவறு என சுட்டிக்காட்டிய பின்னரும் ஆளுநர் தனது தவறை திருத்திக் கொள்ள முடியாத ஆளுமை அற்றவராக காணப்பட்டார்.
அதன் காரணமாகவே நாங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து அவர்களின் அடிப்படை உரிமை மீறல் மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டை வழங்கினோம்” என கூறியுள்ளார்.







