மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அதனை விரைவில் நடத்துங்கள் இலங்கைக்கு இந்தியா அழைப்பு

நீண்டகாலமாகத் தாமதப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை முடிந்தளவு விரைவில்( at the earliest) நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழைப்பு (call upon ) விடுத்துள்ளதோடு, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யம் நோக்கில்,அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட விதிகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது புதன்கிழமை இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ​​மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்த மிஸ்ரி, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரினார். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மீன்பிடித் தகராறைத் தீர்ப்பதற்கு இருதரப்பு வழிமுறைகள் செயல்படும் அதே வேளையில், மனிதாபிமான அணுகுமுறையே இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாகாண சபை தேர்தல்களை “முடிந்தவரை விரைவில்” நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயல்படுத்துமாறும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயல்படுத்துமாறும் இலங்கைத் தலைமைக்கு மிஸ்ரி அழைப்பு விடுத்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பாதகமான எந்த வகையிலும் இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என, 2024 டிசம்பர் மாத இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உறுதிமொழியை இந்திய வெளியுறவுச் செயலர் வரவேற்றார்.

இப்பயணத்தில் ஜனாதிபதி திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைத் தமிழ், இந்திய வம்சாவளித் தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் இடம்பெற்றன.

உள்கட்டமைப்பு, எரிசக்தி, ரயில்வே, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு நாடுகளும் ஆய்வு செய்ததோடு, தனது “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தின.

Share this article

More News