இலங்கையில் சிறுவர்களின் விளையாட்டுப் பொருளான பொம்மைகளை பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள் மூலம் கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் செயற்பாடு குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். பொலிஸார் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண, பாதிப்பில்லாதது போன்று தோற்றமளிக்கும் பொருட்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து, வழக்கமான பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்ப்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை, மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் செயல்பட்டு வரும் பாரியளவிலான போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமாகி உள்ளது.
பொதுவாக ஐஸ் என்று அழைக்கப்படும் 107 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன், சந்தேக நபர் புதன்கிழமை கல்முனை கடற்கரைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது, உயர் ரக போதைப்பொருட்கள் பொம்மைகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 39,620 ரூபாய் பணம், பொட்டலமிடுவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு எடைக்கருவி மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.







