நோயாளிகளுக்குப் பேரிடி – மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடா? விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கி மற்றும் இன்சுலின் உள்ளிட்ட சுமார் 15 வகையான மருந்துகள் தற்போது போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

தற்போதுள்ள மருந்து வகைகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில், ஏனைய நாடுகளில் இருந்தும் இந்த மருந்துகளை இறங்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் கப்பல் கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளால், தற்போதைய விலையில் மருந்துப் பொருட்களை விநியோகிப்பது சாத்தியமற்ற ஒன்று என உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று விடுத்துள்ள அறிவிப்பில், தற்போது கையிருப்பில் உள்ள மூலப்பொருட்கள் தீர்ந்தவுடன், அரச மற்றும் தனியார் துறையினரிடம் விலை திருத்தத்தைக் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலையும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நளின் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போது பழைய கையிருப்புகளைக் கொண்டு உற்பத்தி நடப்பதால் உடனடி விலை உயர்வு இருக்காது. இருப்பினும், அடுத்த 2 முதல் 4 வாரங்களுக்குள் நிலைமை மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share this article

More News