நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பல தரப்பினரும் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதோடு தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்மெனவும் அரச தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டியது இலங்கை பிரஜைகளான நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
மின் விளக்குகள், மின் விசிறிகள், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பயன்படுத்தாத போது உடனடியாக அணைக்கவும்.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்.
குளிரூட்டிகள் (AC) பயன்பாட்டை குறைக்கவும். பகல் நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து வைத்து, விளக்குகளை அணைக்கவும்.
தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துங்கள். இது மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
பொது போக்குவரத்து (பேருந்து, தொடருந்து), சைக்கிள் அல்லது நடைப்பயணத்தை அதிகம் பயன்படுத்துங்கள். (கோவிட் காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலையின் போது பலரும் சைக்கிள் பாவனையை விரும்பியமை குறிப்பிடத்தக்கது)
சுற்றுலாக்கள், உல்லாச பயணங்கள் போன்ற விடயங்களில் ஈடுபடுவதை நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பிற்போடல்.
வாகனங்களில் குளிரூட்டிகளை பயன்படுத்துவதையும் குறைத்தல்.
இதேவேளை அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்
உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.
களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்கு பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும்.
நிறுவனங்களில் மின்தூக்கி பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும்.
உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆகவே மக்களுக்கு சுமையை ஏற்றாத வகையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களாகிய நாம் பொறுப்புடன் ஒத்துழைப்பதும், நம்மால் முடியுமான ஆதரவினை வழங்குவதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் நினைவில் கொள்வது கட்டாயமாகும்.
இதன்மூலம் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகுவதையும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதையும் மற்றும் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதையும் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.







